பாகிஸ்தான் பாடசாலையில் தலிபான்கள் காட்டுமிராண்டித் தாக்குதல்! 100 குழந்தைகள் உட்பட 130 பேர் சுட்டுக்கொலை; 500 பேர் சிறைபிடிப்பு (Videos, Photos)
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை குறிவைத்து தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 130 பேர் பலியானதாக பாகிஸ்தானின் ‘டான்’ செய்தி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த 6தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்த நிலையில், 500-க்கு மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் பயங்கரவாதிகளால் சிறைபிடித்துவைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ பள்ளியில் 8-ல் இருந்து 10 தீவிரவாதிகள் வரை பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்களை சிறைபிடித்து வைத்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்ததாக தெரிகிறது. மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் 8 மணி நேரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. பாகிஸ்தான் ராணுவத் தளபதி பெஷாவர் விரைந்துள்ளார்.
பள்ளிக்குள் இதுவரை 15 முறை குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டதாக தெரியவந்துள்ளது.
முந்தையத் தகவல்கள்:
சம்பவ இடத்தில் இருந்த ராய்டர்ஸ் செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர், “தாலிபன் தீவிரவாதிகள் பள்ளி வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகத்திலிருந்து துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. காயமடைந்த மாணவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே சென்றுள்ளன” என கூறியுள்ளார்.
சம்பவ பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நவாஸ் பெஷாவர் விரைந்துள்ளார்:
பிரதமர் நவாஸ் செரீப் பாகிஸ்தான் விரைந்தார். பெஷாவர் கிளம்பும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை நேரடியாக காண்பதற்குச் செல்கிறேன். அங்கே சிக்கியுள்ள குழந்தைகள் என் குழந்தைகளைப் போன்றவர்கள்” என்றார்.
மருத்துவமனை உறுதி:
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனை வட்டாரம் 17 குழந்தைகள், ஒரு ராணுவ வீரர் உள்பட 21 பேர் இறந்ததை உறுதி செய்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக கைபர் – பக்த்வான் மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரிக் இ தாலிபான் பொறுப்பேற்பு:
தாக்குதல் சம்பவத்துக்கு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. “பெஷாவர் ராணுவப் பள்ளியில் எங்கள் தற்கொலைப் படையினரே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளை குறிவைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறோம். எங்கள் இலக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் மட்டுமே” என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது உமர் கொரஸானி ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கிறார்.
ராணுவ பள்ளியை குறிவைத்தது ஏன்?
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்டுவரும் தாக்குதலுக்கு காரணம் கற்பித்துள்ளது தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு.
“வடக்கு வாசாரிஸ்தானில் ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலுக்கு பழி வாங்கும் விதத்திலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் எங்கள் குடும்பத்தினர் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். பதிலுக்கு நாங்கள் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை குறிவைத்திருக்கிறோம்.
வேதனையை ராணுவத்தினர் உணரவே இதைச் செய்துள்ளோம்” என தீவிரவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ராணுவ உடையில் தீவிரவாதிகள் ஊடுருவல்?
தீவிரவாதிகள் ராணுவ உடையில் ஊடுருவியிருப்பதாகவும், பள்ளியில் அருகே இருந்த மயானத்தின் வழியாகவே அவர்கள் ஊடுருவி இருக்க வேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிக் கூடத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள் சிலர் தீவிரவாதிகளிடம் அதிநவீன ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வகுப்பறைக்குள் நுழைந்து தாக்குதல்
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர், “6 முதல் 7 தீவிரவாதிகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தனர். ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் நுழைந்த அவர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்றார்.
பள்ளி வளாகத்தில் குண்டு வெடிப்பு?
ராணுவப் பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. வெடி சத்தம் வந்ததையடுத்து பள்ளி வளாகத்தை நோக்கி ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment